சிமியோனின் பாடல்
From Wikipedia, the free encyclopedia
சிமியோனின் பாடல்[1] (இலத்தீன்: Nunc dimittis /nʊŋk dɪˈmɪtɪs/) என்பது விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 2:29-32 வரை உள்ள பாடலாகும். இது பொதுவாக இலத்தீனில் Nunc dimittis என்னும் துவக்க வரிகளால் அறியப்படுகின்றது.[2] இப்பாடல் இறைவேண்டலை முடிக்கும்போது, குறிப்பாக திருப்புகழ்மாலையின் இரவு இறைவேண்டலில் பயன்படுத்தப்படுகின்றது.
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க இயேசுவின் பெற்றோரான மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு அவரை கொண்டு சென்றார்கள். அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி இப்பாடலைப்பாடியதாக விவிலியம் விவரிக்கின்றது.