சரகான்
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஓர் நகரம் / From Wikipedia, the free encyclopedia
சரகான் (Sarahan) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[பீம கோயில்}பீமகாளி கோயிலின்]] தளமான இது முதலில் பீமதேவி கோயில் (பீமகாளி) என்று அழைக்கப்பட்டது. இது முன்னாள் புசாகர் மாநிலத்தின் ஆட்சியாளர்களின் தலைமை தெய்வமான பீமகாளி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சிம்லாவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். பழைய இந்திய-திபெத்திய சாலைக்கு அருகில் உள்ள இந்த நகரம் "கின்னௌரின் நுழைவாயில்" என்று அழைக்கப்படுகிறது. [1] ஏழு கிலோமீட்டர் கீழே (17 கி.மீ. சாலை வழியாக) சத்லஜ் ஆறு ஓடுகிறது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சோனிட்பூருடன் இது அடையாளம் காணப்படுகிறது. [2] இது புசாகர் இராச்சியத்தின் கோடைகால தலைநகராக இருந்தது. இராம்பூர் புசாகரின் குளிர்கால தலைநகராக கருதப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் (முன்னாள் மன்னர் பதம் சிங்கின் மகன்) மேலும் சரகானில் "ராஜா சாகப்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1962 முதல் சட்டமன்றம்/நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஆறு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது மனைவி ராணி பிரதிபா தேவியும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
பீமகாளி கோயிலில் புசாகர் இராச்சியத்தின் "குலதேவி" யாக (வம்சத்தின் தலைமை தெய்வம்) இருந்தது. பீமகாளி கோவிலில் இந்து மற்றும் வச்சிரயான பௌத்தச் சிலைகளும் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. அவை பண்டைய இந்திய-திபெத்திய சாலை வழியாக இந்தியா மற்றும் திபெத்திய பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகத்தை பிரதிபலிக்கின்றன. பழைய இந்திய-திபெத்திய சாலையின் தடயங்கள் இன்றும் சரகான் அருகே உள்ள சலாபாக் வழியாக செல்கின்றன. பாரம்பரிய மரக் கோயில் கட்டிடக்கலை காத்-குனி பாணியில் கட்டப்பட்டுள்ளது. [3] சில கல் உருவங்கள் குசான சகாப்தத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் (கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை). [4]