கை பாக்சு இரவு
From Wikipedia, the free encyclopedia
கை பாக்சு இரவு (Guy Fawkes Night) அல்லது கை பாக்சு நாள், சொக்கப்பனை இரவு, வாணவேடிக்கை இரவு என்றெல்லாமும் அறியப்படும் இந்தக் கொண்டாட்டம், முதன்மையாகப் பெரிய பிரித்தானியாவில், ஆண்டுதோறும் நவம்பர் ஐந்தாம் நாள் அனுசரிக்கப்படுகின்றது[1]. இதன் வரலாறு 5 நவம்பர் 1605இல் வெடிமருந்துச் சதியில் பங்கேற்ற கை பாக்சு, பிரபுக்கள் அவையினடியில் சதியாளர்கள் வைத்திருந்த வெடிபொருளைக் காத்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதில் தொடங்குகின்றது. இந்தச் சதியிலிருந்து முதலாம் ஜேம்சு அரசர் உயிர் தப்பியதைக் கொண்டாடும் விதமாக இலண்டன் முழுவதும் மக்கள் சொக்கப்பனைகளை ஏற்றிக் மகிழ்ந்தனர் [2]. பின்னர் நவம்பர் ஐந்துக் கொண்டாட்டத்தை ஆண்டுவிழாவாக மாற்றிச் சட்டம் இயற்றப்பட்டது; இந்தச் சட்டத்தின்படி சதித்திட்ட முறியடிப்பிற்கான நன்றி நவிலலாக பொது விடுமுறையாக கட்டாயப்படுத்தப்பட்டது.
ஒருசில பத்தாண்டுகளில் இது இங்கிலாந்தின் அரசுவிழாக்களில் முதன்மை பெற்றது; இது ஆழமான சீர்திருத்தச்சபை சமயக் குறியீட்டைக் கொண்டிருந்ததால் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வுகளைத் தெரிவிக்கும் விழாவாகவும் மாறியது. புனிதத் ந்தையாரின் சமய ஆட்சியால் விளையும் தீமைகள் எடுத்துரைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பரவலாக தாங்கள் வெறுக்கும் நபர்களின் கொடும்பாவிகளை எரிக்கத் தொடங்கினர். 1673இல் முடி சூடவிருந்த இளவரசர் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு கத்தோலிக்கராக மாறியதை பொதுவில் அறியப்படுத்திய பிறகு அந்தாண்டு பாக்சின் கொடும்பாவியை கத்தோலிக்க திருத்தந்தையாக பாவித்து கொளுத்தினர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கை பாக்சின் கொடும்பாவியுடன் பிச்சை எடுக்கும் அறிக்கைகள் வெளியாயின. மெதுவாக நவம்பர் 5 கை பாக்சு நாள் என அறியப்படலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் லெவிசு, கில்டுபோர்டு போன்ற நகரங்களில் இரு வகுப்பினரிடையே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1850களில் மாறிவந்த மனப்பாங்குகளால் கத்தோலிக்க எதிர்ப்பு பண்பு குறையத் தொடங்கியது. 1859இல் நவம்பர் ஐந்துக் கொண்டாட்டங்களைக் கட்டாயமாக்கியச் சட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கை பாக்சு நாள் அனைவரும் மகிழக்கூடிய சமூக்க் கொண்டாட்டமாக மாறியது; தற்போது இதன் துவக்கக்கால குவியத்தை இழந்துள்ளது. இன்றைய நாட்களில் கை பாக்சு இரவு ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய நிகழ்வுகளாக, சொக்கப்பனை மற்றும் ஆடம்பரமான வாணவேடிக்கைகளுடன் நடத்தப்படுகின்றன.
கை பாக்சு இரவுக் கொண்டாட்டங்களை குடியேற்றவாதிகள் தாங்கள் ஆட்சி செய்த வெளிநாட்டுக் குடியேற்றங்களிலும் கடைபிடிக்கத் துவங்கினர். வட அமெரிக்காவில் புனிதத் தந்தை நாள் என அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு இவை கைவிடப்பட்டன. இருப்பினும் மற்றொரு பழைய கொண்டாட்டமான, ஆலோவீன், பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலரின் கூற்றுப்படி வருங்காலங்களில் அலோவீன் கொண்டாட்டங்கள் நவம்பர் 5 கொண்டாட்டங்களை முற்றிலுமாக மறக்கடிக்கச் செய்யும்.