கெட்டிசுபெர்க்கு உரை
From Wikipedia, the free encyclopedia
கெட்டிசுபெர்க்கு உரை (Gettysburg Address) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனால் கெட்டிசுபெர்க்கு தேசியக்கல்லறைத் தோட்டத்தில் ஆற்றிய புகழ்பெற்ற உரையாகும். இது அமெரிக்க வரலாற்றிலேயே தலைசிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[4] அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கெட்டிசுபெர்க்கு போர்க்களத்தில் அமெரிக்க ஒன்றியப் படைகள் பிரிவினைப் படைகளான கூட்டமைப்புப் படைகளை முறியடித்து நான்கரை மாதங்கள் கழித்து, நவம்பர் 19, 1863 அன்று கெட்டிசுபெர்க்கு தேசிய கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்குப் படைக்கும் நிகழ்ச்சியில் இந்த உரையாற்றினார்.
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் வாழ்த்துரை சொல்ல இரண்டாம் நிலைப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த அதிபர் லிங்கன் மிகவும் அக்கறையுடன் செதுக்கிய இந்தப் பேச்சு, அமெரிக்க நாட்டின் அடிப்படை நோக்கம் பற்றி எடுத்துரைக்கும் பேருரைகளில் தலையாயனவற்றில் ஒன்றாகக் கருதப்பட்டு இன்றும் மக்களை வழிநடத்தும் பேச்சாகப் போற்றப்படுகிறது. இரண்டே நிமிடங்களில் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலைப் பறைசாற்றத்தில் வலியுறுத்தப் பட்டிருக்கும் மாந்த சமத்துவக் கொள்கைகளை வலியுறுத்தினார்.[5] மேலும் நாட்டை அலைக்கழிக்கும் பிரிவினைச் சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்தைக் காக்கவே உள்நாட்டுப்போர் புரிய வேண்டியதென்று முழங்கினார்.[6] இந்தச் சிக்கலில் எட்டிய வெற்றி அனைத்து குடிமக்களுக்கும்[7] உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டும்[7]"ஒரு புதிய விடுதலைக்கு,"[8] வித்திட்டுள்ளதாக அறிவித்தார். லிங்கன் மேலும் உள்நாட்டுப் போர் அமெரிக்க ஒன்றியத்தைக் காப்பாற்ற நிகழ்ந்த போராட்டமல்லாது மாந்த சமத்துவக் கொள்கைக்கான போராட்டமாகவும் விவரித்தார்.[5]
1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப் புரட்சிப் போரை நினைவுக்கூறுமுகமாக — தற்போது புகழ்பெற்ற சொற்களாக விளங்கும் "நான்கு இருபதுடன் ஏழாண்டுகளுக்கு முன்பு"("Four score and seven years ago") என்ற முதற்சொற்களுடன் இந்த உரை தொடங்குகிறது. இதில் உள்ள "ஸ்கோர்" (score) என்ற ஆங்கிலச் சொல் இருபது என்பதற்கானப் பழைய ஆங்கிலச்சொல். இந்த உரையில் ஐக்கிய அமெரிக்காவின் நிறுவற் கோட்பாடுகளை உள்நாட்டுப் போரின் சூழமைவில் தொடர்புபடுத்தி ஏன் அப்போது நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப்போரால் அந்தக் கோட்பாடுகள் நசிந்து போகக்கூடும் என்று அவையோருக்கு நினைவூட்டினார். அந்தக் கோட்பாடுகளைக் காக்கப் போராடி கெட்டிசுபெர்க்குப் போர்க்களத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தைப் போற்றினார். மேலும் கேட்போரிடம் அமெரிக்காவின் சார்பாளர் மக்களாட்சி தழைத்திருந்து உலகிற்கு ஒளிவிளக்காக விளங்கத் தொடர்ந்து போராட வேண்டுமென்று வலியுறுத்தினார். பத்தே சொற்றொடர்கள் கொண்ட உரைக்கு முத்தாய்ப்பாய்
போர்க்களத்தில் உயிர்துறந்தவர்கள் வீணாக மடிந்திராமலிருக்க - இந்த நாடு, கடவுளின் திருவடியில், புதியதொரு வீடுபேறு பெற்று - மக்களுக்கான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் அரசு அழியாது என்றும் புவிமிசை இருக்கும் (that these dead shall not have died in vain — that this nation, under God, shall have a new birth of freedom — and that government of the people, by the people, for the people, shall not perish from the earth)
என்று கூறிப் பேச்சை நிறைவு செய்தார். அந்தக் கடைசிச் சொற்கள் இன்றும் மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிநாதமாய் உலகெங்கும் மேற்கோள் காட்டப்படுகிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.