கல்பதுக்கை
From Wikipedia, the free encyclopedia
கல்பதுக்கை (cist, அல்லது kist) என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும்.[1] கற்பதுக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பல நாடுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் காண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, இது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான கல்லால் அமைக்கப்பட்ட சிறிய பெட்டிபோன்ற அமைப்பு எனப்படுகிறது. தென்னிந்தியாவிலும் பல கற்பதுக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியாவில் காணப்படும் பிற்காலத்துக் கற்பதுக்கைகள் கூடுதல் சிக்கல்தன்மை கொண்டவை. இவை நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்புக் கொண்டவை.[2] இயற்கையாகக் காணப்படும் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்திட்டைகள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே இவ்வாறான கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன.[3]