கல்திட்டை
From Wikipedia, the free encyclopedia
கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.
தொடக்கக் கல்திட்டைகள் ஏன், யாரால், எப்பொழுது கட்டப்பட்டன என்பது குறித்துத் தெளிவில்லை. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை யாரால் கட்டப்பட்டவை என்பதைத் தொல்லியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், இவை எதற்காகக் கட்டப்பட்டன என்று அறிவது கடினமாக உள்ளது. தெளிவான சான்றுகள் இல்லாவிட்டாலும், இவை எல்லாமே கல்லறைகளாகவோ அல்லது புதைகுழிகளாகவோ இருக்கலாம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. கதிரியக்கக்கார்பன் முறை மூலம் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்கத்தக்க மனித எச்சங்கள் இவ்வாறான கல்திட்டைகளுக்கு அருகில் காணப்படுவது உண்டு. ஆனாலும், இவ்வெச்சங்கள் கல்திட்டைகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிப்பது கடினம்.[1]