கரந்தடிப் போர் முறை
From Wikipedia, the free encyclopedia
கரந்தடிப் போர்முறை அல்லது கொரில்லாப் போர்முறை (Guerrilla warfare) என்பது ஒருவகை ஒழுங்கில்லாப் போர்முறை ஆகும். இந்தப் போர்முறை ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு பெரிய விரைவாக இயங்க இயலாத வழமையானப் படைகளை எதிர்கொள்வதாகும். இதற்கு பதுங்கித் தாக்குதல், நாசமாக்கல், திடீர்த் தாக்குதல், எதிர்பாராத தன்மை, மிக விரைவான இயக்கம் போன்ற படைத்துறை செய்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதும் தாக்கப்படக்கூடிய இலக்குகளை தாக்கி விரைவாகத் திரும்பிவிடுதலும் ஆகும்.
இது உலகின் பல மொழிகளிலும் கொரில்லாப் போர் என்று வழங்கப்படுகிறது. எசுப்பானிய மொழியில் இந்தச் சொல்லிற்கு சிறிய போர் என்ற பொருளாகும். 18ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இந்தச் சொல் இத்தகைய போர்வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரில்லா என்ற சொல் ஆங்கிலத்தில் 1809 முதல் புழக்கத்தில் உள்ளது.