ஊர்ட்கென் காடு சண்டை
From Wikipedia, the free encyclopedia
ஊர்ட்கென் காடு சண்டை (ஆங்கிலம்: Battle of Hürtgen Forest, இடாய்ச்சு: Schlacht im Hürtgenwald) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் ஜெர்மானிய அமெரிக்க படையினரிடையே நிகழ்ந்த ஒரு சண்டைத் தொடரைக் குறிக்கிறது. பெல்ஜிய-ஜெர்மானிய எல்லைப்பகுதியில் உள்ள ஊர்ட்கென் (யூர்ட்கென்) காட்டுப் பகுதியில் செப்டம்பர் 140, 1944 - பெப்ரவரி 10, 1945 காலகட்டத்தில் நடந்த இச்சண்டை இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய மண்ணில் அதிக நாட்கள் தொடர்ந்து நடந்த சண்டையாகும். மேலும் வரலாற்றில் அமெரிக்கத் தரைப்படையினர் தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஈடுபட்ட சண்டையும் இதுவே.
ஊர்ட்கென் காடு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
ஊர்ட்கென் நகர விடுதிக்கு முன்பு ஒரு அமெரிக்க ராணுவ ஜீப் நிற்கிறது |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கோர்ட்னி ஹோட்ஜஸ் (முதலாவது அமெரிக்க ஆர்மி) லென்னர்ட் . டி. கெரோவ் (5வது கோர்) ஜோசப் காலின்ஸ் (7வது கோர்) | வால்டர் மோடல் | ||||||
பலம் | |||||||
120,000 | 80,000 | ||||||
இழப்புகள் | |||||||
32,000[1]-33,000 பேர் (12,000 பேர் கொல்லப்பட்டனர்)[2][3] | 28,000 பேர் (12,000 பேர் கொல்லப்பட்டனர்)[3] |
1944 இன் பிற்பகுதியில் நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் பிடியில் நான்கு ஆண்டுகளாய் சிக்கியிருந்த மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளை மீட்டனர். பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் மிகப்பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டன. அடுத்து ஜெர்மனி மீது நேரடியாகத் தாக்குவது நேச நாட்டுப் படைகள் திட்டம். ஜெர்மனியின் எல்லையிலிருந்த இரைன் ஆற்றையும் உரூர் ஆற்றையும் கடக்க பல வழிகளில் நேச நாட்டுப் படைகள் முயன்றன. இதற்காக முதலில் வகுக்கப்பட்ட மேல்நிலை உத்தி மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் தோல்வியால் பலனற்றுப் போனது. அடுத்து ஆஹன் இடைவெளி வழியாக ஜெர்மனிக்குள் ஊடுருவ ஆஹன் சண்டை தொடங்கியது. அதில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளைப் பக்கவாட்டிலிருந்து ஜெர்மானியப் படைகள் தாக்காமல் காக்க, அமெரிக்கத் தளபதிகள் ஊர்ட்கென் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஊர்ட்கென் காட்டுப்பகுதி ஜெர்மானியர்களின் எதிர்கால உத்திக்கு மிக அவசியமானதாக இருந்தது. அடுத்து நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்த ஆர்டென் தாக்குதலுக்கு (பல்ஜ் சண்டை) இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் உரூர் ஏரியின் முகப்புப் பகுதியிலுள்ள ஷ்வாம்மானுவேல் அணைக்கட்டுக்குச் செல்லும் சாலைகள் ஊர்ட்கென் வழியாகச் சென்றன. அந்த அணைக்கட்டைத் திறந்து விட்டு உரூர் ஆற்றில் வெள்ளம் பாயச்செய்து ஆற்றைக்கடப்பத்தைத் தடுக்க முடியும். இவ்விரு காரணங்களால் ஊர்ட்கென் பகுதி ஜெர்மானியருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது.
செப்டம்பர் 1944 இல் அமெரிக்கப் படைகள் ஊர்ட்கன் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் சண்டையில் யாருக்கும் வெற்றியில்லாமல் இழுபறி நிலை ஏற்ப்ட்டது. சிக்ஃபிரைட் கோட்டின் அரண்நிலைகளைப் பயன்படுத்தி ஜெர்மானியர்கள் அமெரிக்கப்படைகளுக்குப் பெரும் இழப்புகளை விளைவித்தனர். இச்சண்டையில் 33,000 அமெரிக்கர்களும் 28,000 ஜெர்மானியரும் மாண்டனர். ஆஹன் சண்டையில் வெற்றி கிட்டினாலும், உரூர் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்தது. டிசம்பர் 17 ஆம் தேதி பல்ஜ் சண்டை தொடங்கியதால் இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. அச்சண்டை முடிவு பெறும்வரை (பெப்ரவரி 1945) வரை ஊர்ட்கென் காடு அமெரிக்கர் வசமாகவில்லை