இறுதிச் சடங்கு (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
அந்திமக் கிரியைகள் அல்லது மரணச் சடங்குகள் (Antyesti) (சமசுகிருதம்:अन्त्येष्टि) இந்து சமயத்தில் செய்யும் இறுதி மற்றும் 16வது சடங்காகும். இறந்தவரின் உடலை எரிக்கும் போது இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. [2][3][4]ஒருவர் இறந்த பிறகு இச்சடங்கு அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்டாலும், அடுத்த உலகத்தின் மதிப்பு, நிகழ்காலத்தை விட அதிகமாக இருப்பதால் மரணச் சடங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறுதி சடங்குகள் புரோகிதர் உதவியுடன் செய்யப்படுகிறது.[5][6]
ஒருவர் இறந்த பிறகு முதலில் அவரது வாயில் துளசி இலைகள் கலந்த நீர் விட வேண்டும்.பின்னர் பசுவின் சாணத்தைப் பூசி சுத்திகரிக்கப்பட்ட தரையில் இறந்தவரை கிடத்த வேண்டும். இறந்தவரின் பழைய ஆடைகள் அகற்றப்பட்டு, நீரால் உடலைக் குளிப்பாட்ட வேண்டும். உடலை வெட்டப்படாத புதிய துணியால் சடலத்தை மூட வேண்டும். மூங்கில் கட்டைகளில் செய்த பாடையை, சணல் கயிறுகளால் கட்ட வேண்டும். சடலத்தை பாடையில் வைத்து சணல் கயிற்றால் கட்ட வேன்டும். சடலத்திற்கு மாலை அணிவிக்க வேண்டும். அந்நேரம் புரோகிதர் இறப்பு தொடர்பான வேத மந்திரங்களை உச்சரிப்பார்.
பின்னர் இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் சடலத்துடன் கூடிய பாடையைச் சுற்றி வலம் வந்து ஆராத்தி எடுப்பர். பின்னர் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சடலத்தை எரியூட்டும் (தகன மேடைக்கு) இடத்திற்கு கொண்டு செல்லும் போது கோவிந்தா, கோவிந்தா அல்லது ராமா, ராமா என தொடர்ந்து உச்சரிப்பர்.
வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறக்கும் போது, சுடுகாட்டிற்கு அக்னியை (நெருப்பு) பானையில் எடுத்துச் செல்லப்படும். அந்த அக்னியால் மட்டும் மட்டும் முதலில் சடலத்தை எரிக்கப் பயன்படுத்துவர். இச்சடங்கு தம்பதியரின் திருமணத்தின் முடிவையும்; மரணச் சடங்கின் துவக்கதையும் குறிக்கிறது.
தகன மேடை மீது சடலம் வைக்கப்பட்ட பிறகு, உறவினர்கள் வாய்க்கரிசி போட்டும், நெய் ஊற்றியும் மற்றும் இரத்தத் தொடர்புடைய மூத்த மகன் அல்லது வேறு மகன்கள் அல்லது பங்காளியால் சிதைக்கு தீ மூட்டப்படுகிறது. எள் விதைகள் சிதை நெருப்பில் தெளிக்கப்படுகிறது. தற்போது தகனத்திற்கு மின்சார சூளை பயன்படுத்தப்படுவதால், வாரிசுகளால் சிதைக்கு தீ மூட்டும் சடங்கு செய்ய இயல்வதில்லை.
பின்னர் பின்பற்றப்படும் சடங்குகள் மற்றும் அனுசரிப்புகள், இந்தியாவில் பிரதேச ரீதியிலும், இனக்குழுக்கள் ரீதியிலும் வேறுபடுகிறது. சடலத்தை தகனம் செய்வதன் மூலம், உடலின் ஐந்து அடிப்படை கூறுகளான பஞ்ச பூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்வெளி ஆகியவை பிரபஞ்சத்திற்குத் திரும்புகிறது.