ஆன்டன் செக்கோவ்
உருசிய நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் (Anton Pavlovich Chekhov, /ˈtʃɛkɔːf, -ɒf/;[1] உருசியம்: Анто́н Па́влович Че́хов, உருசிய பலுக்கல்: [ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf], அந்தோன் பாவ்லொவிச் சேகவ்; 29 சனவரி [யூ.நா. 17 சனவரி] 1860 – 15 சூலை [யூ.நா. 2 சூலை] 1904) ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.[2][3] ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.[4] செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார்.[5]
ஆன்டன் செகாவ் Антон Чехов | |
---|---|
பிறப்பு | ஆன்டன் பாவ்லோவிச் செக்காவ் (1860-01-29)29 சனவரி 1860 தகரனோக், உருசியப் பேரரசு |
இறப்பு | 15 சூலை 1904(1904-07-15) (அகவை 44) பேடன்வைலர், செருமானியப் பேரரசு |
கல்லறை | மாஸ்கோ |
தேசியம் | உருசியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | முதலாவது மாஸ்கோ அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் |
பணி | மருத்துவர், சிறுகதை, நாடக எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | ஓல்கா நிப்பர் |
விருதுகள் | பூஷ்கின் பரிசு |
கையொப்பம் |
1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். த சீகல் நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை நாடகக் குழுமத்தினருக்கும்[6], பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.[7]
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.[8]
இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.