அஞ்சல் குறியீடு
From Wikipedia, the free encyclopedia
அஞ்சல் குறியீடுகள் (பல நாடுகளில் பலவிதமாக, அஞ்சல் எண், அஞ்சலக சுட்டு எண். ஃசிப் எண் என,அறியப்படுகிறது) அஞ்சலை சரியாக பிரித்தெடுக்க அஞ்சலகத்திறகு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையும் குறிப்பனவாகும்.
1941 ஆம் ஆண்டு ஜெர்மனிதான் இத்தகைய அஞ்சல் குறியீட்டை அறிமுகப்படுத்திய முதல் நாடாகும். ஐக்கிய இராச்சியம் 1959இல் பின்பற்றியது; ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1963இல் இம்முறையைத் தழுவியது. பிப்ரவரி 2005 கணக்கின்படி, உலக அஞ்சல் ஒன்றியத்தில் இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் அஞ்சல் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முறையை பின்பற்றாத நாடுகளுக்கு காட்டாக அயர்லாந்து மற்றும் பனாமா உள்ளன. சீனாவின் அங்கமாக இணைந்த ஹாங்காங்க் தனது நெடுங்கால அஞ்சல் அமைப்பையே பின்பற்றுகிறது; உள்ளூர் அஞ்சல்களுக்கு எந்த குறியீட்டையும் பாவிப்பதில்லை.சீனாவும் ஹாங்காங்கிற்கு எந்த குறியீட்டையும் வழங்கவில்லை.
பொதுவாக அஞ்சல் குறியீடுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பிறகு வழங்கப்பட்டாலும், சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள்,பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற கூடுதல் அஞ்சல் பெறும் தனி முகவரிகளுக்கோ நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படலாம். பிரெஞ்ச் செடெக்ஸ் முறை ஓர் காட்டு.