அங்கேரியின் முதலாம் இஸ்தேவான்
பதினோராம் நூற்றாண்டு ஹங்கேரிய அரசர் மற்றும் புனிதர் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் இஸ்தேவான் அல்லது புனித அரசர் இஸ்தேவான் (அங்கேரியம்: Szent István király; இலத்தீன்: Sanctus Stephanus, ஏறத்தாழ 975 முதல் கி.பி. 15 ஆகஸ்ட் 1038 வரை) அங்கேரியை ஆண்ட (கி.பி. 1000 அல்லது 1001 - கி.பி. 1038) முதல் அரசராவார். இவர் பிறந்த வருடம் உறுதியாகத் தெரியாவிட்டாலும் இவரின் வாழ்க்கை வரலாற்று மூலங்களிலிருந்து பெற்ற தகவல்களிலிருந்து அங்கேரியிலுள்ள எஸ்தகொம் நகரில் 975ம் ஆண்டின் பின் பிறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. அங்கேரியர்களின் பெரும் இளவரசரான கெய்சாவிற்கும் அவரின் மனைவி சாரோல்ட்க்கும் ஒற்றை மகனாகப் பிறந்த இஸ்தேவனுக்கு முதலில் பாகால் சமயப் பெயரான வஜிக் எனப் பெயரிடப்பட்டது. இவர் ஞானஸ்நானம் பெற்றது எப்போது என்ற தகவல் தெரியவில்லை. இவரின் பெற்றோர்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் குடும்பத்தின் முதல் கிறித்தவ விசுவாசியாக இஸ்தேவன் விளங்கினார். ஒட்டோனிய அரச மரபைச் சேர்ந்த பவேரிய இளவரசி கிசெலாவை இவர் மணம் முடித்தார்.
புனித இஸ்தேவான் 1 | |
---|---|
முதலாம் இஸ்தேவான் | |
ஆட்சிக்காலம் | 1000 அல்லது 1001–1038 |
அங்கேரி | 25 டிசம்பர் 1000 அல்லது 1 ஜனவரி 1001 |
ஆட்சிக்காலம் | 997–1000 or 1001 |
முன்னையவர் | கேசா |
பிறப்பு | வஜிக் |
துணைவர் | கிசேலா |
மரபு | அர்பாத் பேரரசு |
தந்தை | கேசா |
தாய் | சாரொல்ட் |
மதம் | உரோமன் கத்தோலிக்கம் |
கையொப்பம் |
அங்கேரியர்களின் பெரும் இளவரசராக இருந்த இஸ்தேவானின் தந்தை கேசா இறந்த பிறகு அரியணைக்காக தனது உறவினர் கொப்பானியுடன் போராட வேண்டியிருந்தது. கொப்பானி பாகால் சமயத்தை பின்பற்றும் பெரும்படையுடன் அரியணைக்காக உரிமை கோரியிருந்தார். உள்நாட்டு பிரபுக்கள் மற்றும் வெளிநாட்டு போர்வீரர்களின் உதவியுடன் கொப்பானியை தோற்கடித்த இஸ்தேவான் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்தர் அனுப்பிய மகுடத்தைக் கொண்டு 25 டிசம்பர் 1000வது (அல்லது ஜனவரி 1001) ஆண்டில் முடிசூடிக்கொண்டார். தொடர்ச்சியான போர்கள் மூலம் இவர் கார்பந்தியன் வடிநிலங்களைக் கைப்பற்றி தனது ஆட்சிப் பகுதியோடு ஒருங்கிணைத்தார். இவர் புனித உரோமைப் பேரரச மன்னனான இரண்டாம் கொன்ராட்டின் படைகளை 1030ல் அங்கேரியிலிருந்து வெளியேற்றியதன் மூலம் தனது நாட்டின் இறைமையை தக்கவைத்துக் கொண்டார்.
இஸ்தேவான் குறைந்தபட்சம் ஒரு கிறித்தவ பேராயர் அலுவலத்தையும் ஆறு ஆயர் அலுவலகங்களையும் மூன்று புனித ஆசீர்வாதப்பர் சபைகளையும் அமைத்தார். இதன்மூலம் அங்கேரியின் மிகப் பெரிய தேவாலயம் புனித உரோமைப் பேரரச பேராயர்களால் விருத்தியாக்கப்பட்டது. இவர் கடுமையான சட்டங்கள் இட்டு அங்கேரியில் கிறித்தவம் பரவ வழிவகை செயதார். இஸ்தேவான் ஆட்சிகாலத்தில் அங்கேரியில் அமைதி நிலவியதால் மேற்கு ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ புனித தலங்களுக்குச் செல்லும் யாத்திரீகர்கள் அங்கேரியூடாக பயணம் மேற்கொள்வதை விரும்பினர்.
15 ஆகஸ்ட் 1938ல் மரணமடைந்த இஸ்தேவான் செகேஸ்பெகேவர் நகரில் அவர் அமைத்த புனித மரியாள் பேராலய வளாகத்தில் புதைக்கப்பட்டார். இவர் இறப்பின் பின் அங்கேரியில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டு பல தசாப்தங்கள் தொடர்ந்தது. 1083ல் அரசர் இஸ்தேவானுக்கும் அவரின் மகன் எமரிக்குக்கும் திருத்தந்தை ஏழாம் கிரகோரியால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இஸ்தேவான் அங்கேரியில் மட்டுமல்லாது அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மிகப் பிரபல புனிதராகத் திகழ்கிறார். இவரைக் கௌரவிக்கும் பொருட்டு அங்கேரி இவரின் திருநாளைப் (ஆகஸ்ட் 20) பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.